Archives: அக்டோபர் 2018

இருளில் நம்பிக்கை

சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கடவுள் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

வேதாகமத்தை வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதால் ஏற்படும் முடிவில்லாத விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்று என் தந்தை கூறக்கேட்டிருக்கிறேன். அதே சமயம், இரண்டு தரப்பினரும் அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் சமரசமடையாத வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது சாத்தியமா? புதிய ஏற்பாட்டில், பவுல் ரோமருக்கு எழுதும் கடிதத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். சமூக, அரசியல், மத பிணக்கங்களில் சிக்கியிருந்த வாசகர்களுக்கு எழுதும்போது, எதிர் எதிர் நிலைமையில் உள்ளவர்கள்கூட எப்படி ஒரு பொதுவான தளத்தில் சேரலாம் என்று பரிந்துரை செய்கிறார் (14:5-6).

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து, நம்முடைய கருத்துக்களுக்காகவும், நம்முடைய வேறுபாடுகளில்  நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறோம் என்பதற்காகவும், நாம் கடவுளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (வச. 10).

நம்முடைய கருத்துக்களைவிட முக்கியமான விஷயங்கள் – நம்முடைய வேதாகம விளக்கங்களையும்விட – உண்டு என்பதை நாம் நினைவுகூர பிணக்கங்கள் உதவும். கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோமா, நம்முடைய எதிரிகளையும்கூட நேசித்தோமா என்று நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பார்த்தால்,  இரண்டு தரப்பினரும், பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையோடு, அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்று என் தந்தை கூறியது நினைவுக்கு வருகிறது.

நன்றி மனப்பான்மையைப் பற்றிகொளல்

தீராத வலி, நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் ஆகியவற்றால், பல ஆண்டுகளாக நான் அடக்கி வைத்திருந்த சலிப்பும், விரக்தியும் வெளிவரத் தொடங்கின. என்னுடைய அதிருப்தியின் காரணமாக அதிகமாக அதிகாரம் செய்பவளாக, நன்றி இல்லாதவளாக மாறினேன். என்னுடைய கணவர் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினேன். அவர் வீட்டை சுத்தம் செய்தது சரியில்லை என்று குறை சொன்னேன். அவர் மிக அருமையாக சமைப்பார் என்றாலும், வித விதமாக சமைக்கவில்லை என்று புலம்பினேன். நான் அதிருப்தியாக இருப்பது அவரை அதிகமாக காயப்படுத்துகிறது என்று அவர் சொன்னபோது, நான் கோபம் கொண்டேன். நான் படும் அவஸ்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் கடைசியில் கடவுள் என் தவறுகளை எனக்குப் புரியவைத்தார். நான் கடவுளிடமும், என் கணவரிடமும் மன்னிப்புக் கேட்டேன்.

வித்தியாசமான சூழலுக்காக ஏங்குவது, குறைசொல்லும் குணத்தை அல்லது, உறவுகளை சிதைக்கும் சுயநலத்தை நம்மில் ஏற்படுத்தும். இஸ்ரவேலர்களுக்கு இந்தத் தடுமாற்றம் பரிச்சயமான ஒன்று. அவர்கள் எப்போதும் திருப்தி அடையாமல், கடவுள் கொடுத்ததைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 17:1-3). கடவுள் “வானத்திலிருந்து அப்பம்” (16:4) வருஷிக்கப்பண்ணி, தம் ஜனங்களை போஷித்தாலும், அவர்கள் மற்ற உணவுகளுக்காக ஏங்க ஆரம்பித்தார்கள் (எண்ணாகமம் 11:4). கர்த்தரின் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தும் அன்றாட அற்புதங்களைக் குறித்து சந்தோஷப்படாமல், இஸ்ரவேலர்கள் இன்னும் அதிகமாக, நல்லதாக, வித்தியாசமானதாக, தாங்கள் முன்னே சாப்பிட்டதுகூட (வச. 4-6) வேண்டும் என்றார்கள். தங்களுடைய விரக்தியை அவர்கள் மோசேயிடம் காண்பித்தார்கள் (வச. 10-14).

கர்த்தரின் நற்குணத்தையும், விசுவாசத்தையும் நம்புவது, நமக்கு நன்றி மனப்பான்மையைத் தரும். எண்ணற்ற வழிகளில் நம் மேல் அக்கறை காட்டி, நம்மை பாரமரிப்பதற்காக அவருக்கு நாம் இன்று நன்றி சொல்வோம்.

என் சித்தம் அல்ல, உம் சித்தம்

கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் கடவுள் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே கடவுளை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை கடவுளிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

கடவுள் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி கடவுள்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.